Wednesday, December 06, 2006

கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்
துக்கடாவில் கொஞ்சம் வைக்கோப்புல்லாம்
வைக்கோபுல்ல மாட்டுக்குப் போட்டா
மாடு பால் கொடுத்ததாம்
பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா
கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா
கல்லெல்லாம் பாம்பாம்
பாம்படிக்கத் தடியத் தேடினா
தடியெல்லாம் சேறாம்
சேறு கழுவ ஆத்துக்குப் போனா
ஆறெல்லாம் மீனாம்
மீனப்புடிக்க வலைக்குப் போனா
வலையெல்லாம் ஓட்டையாம்
ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா
ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்
கதை கதையாம் காரணமாம்


என்னடா ஊருக்குப் பொகும் வரை நன்றாகத்தானே இருந்தான், திரும்பி வந்ததும் இப்படி ஏதோ உளருகிறானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

'எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் அவன் என்னைப் போலவே இருக்கிறான்!'

நான் ஊருக்குப் போனதும் அதை ஒட்டித்தான். தாயும் சேயும் நலமே.

குழந்தைகளுடனான என் அருகாமை ஒன்றும் புதிதல்ல. என் பெரிய அக்காவின் இரண்டு குழந்தைகள்,சின்ன அக்காவின் குழந்தைகள், அண்ணனின் குழந்தை என்று நிறையக் குழந்தைகள் பிறந்து என் கண்முன்னே வளர்ந்தார்கள்.
அவர்கள் மட்டுமல்லாது ஆட்டுக் குட்டிகள், நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் என்று பலவும் எங்கள் வீட்டில் பிறந்து வளர்ந்தன.
பெரும்பாலும் மனிதக் குழந்தைகள் மட்டுமே விளையாட்டு, குறும்பு,பாசம் காட்டுதல், கோபித்துக் கொள்ளுதல் அடம் பிடித்தல் போன்ற குணங்களை வெளிக்காட்டுவார்கள் என்று நாம் நினைப்பது தவறு. இந்த இயல்புகளை நீங்கள் ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி,பூனைக்குட்டி, மாட்டுக் கன்றுகளிடமும் பார்க்கலாம். ஆனால் நாம் பெரும்பாலும் இவற்றின் செய்கைகளைக் கூர்ந்து கவனிப்பது இல்லை என்பதே உண்மை.

இதனாலேயே எனக்கு முதற் குழந்தை (மெல்லிசை -தற்போது 2 வயது) பிறந்தபோது மற்றவர்களுக்கு ஏற்பட்ட 'தலைகால் புரியாத - இன்ம்புரியாத பரவசம்' எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஏற்படாதது ஏதோ ஒரு பெருங்குறை என்பது போல என் நண்பர்கள் சிலரும் என்னிடம் கோபித்துக் கொண்டார்கள்.
மேலே சொன்ன பாட்டு (?) என் அக்காவின் சின்ன மகள் (கயல்விழி - 3 வயது) என்னிடம் தன் மழலை மொழியில் குழறிய ஒன்று.
திரும்பி வந்ததும் குழந்தைகளுக்கான பாட்டு, கதை என்று என்னைத் தேட வைத்தது இந்தப்பாட்டுதான்.
என் மகள் செய்த, செய்து வருகிற சேட்டைகளையும் வரும் நாட்களில் எழுதுவேன்

Thursday, September 28, 2006

ஆள் மாறாட்டம்

எனது பெயரிலேயே எனக்கு ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி கிடைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நான் பெறும் ஆள் மாறாட்ட மின்னஞ்சல்கள் நிறைய.
என் பெயருடைய யாரோ ஒரு மணமகனுக்காக அனுப்பப்படும் மணப்பெண்களின் புகைப்படங்கள், வெளிநாடு சென்று படிக்கின்ற தன் பழைய மாணவனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அனுப்பி வைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தன் அராய்ச்சிக் கட்டுரைக்கு பதில் அனுப்பாததற்காக, 'வெளி நாடு சென்றதும் நீ மாறி விட்டாய். நன்றியில்லாத பயல்' என்பதான திட்டுக்கள், அய்.சி அய்.சி வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பச் சொல்லும் உறவுகளின் மின்னஞ்சல்கள் எனப்பல.
நான் ஆரக்கிள் தேர்வுக்குப் பணம் கட்டி விண்ணப்பித்தபோது என்னுடைய மின்னஞ்சல் முகவரியைச் சரியாகக் கவனிக்காமல் தவறான ஒரு மின்னஞ்சல் முகவரிக்குத் தேர்வு நாள் விவரங்களை அனுப்பிவிட்டு , நான் தேர்வுக்கு வராத காரணத்தால் எனக்கு பணம் இழக்கச் செய்ததோடு அல்லாமல் தான் செய்தது சரியே என்றும் வாதிட்டாள் 'பொறுப்பான ' பெண்ணொருத்தி. [பிறகு நான் அதிகம் பொங்கியபோது தான் பணம் கட்டுவதாகவும் , ஆனால் தில்லிக்கு அருகிலிருக்கும் நான் பெங்களூர் வந்து தேர்வெழுத வேண்டும் எனச் சொல்லி கழித்துக் கட்டினாள் !!. ]
இன்று மின்னஞ்சல் என்பது ஒரு மாற்றுத் தொடர்பு வழியாக எறக்குறைய மாறி விட்டபின்னும், மின்னஞ்சல் அனுப்புவர்களின் கவனக்குறைவு பலபேருக்கு பலவிதமான இடைஞ்சல்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. [நான் இங்கு spam பற்றிப் பேசவில்லை.]
நேர இழப்பு, பண இழப்பு மட்டுமல்லாமல் நட்பையும் உறவுகளையும் கூட சிலர் இழக்க நேரலாம். தவறான மின்னஞ்சலுக்குத் தன் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி விட்டுத் தன் மாணவன் மீது ஆத்திரம் கொண்டுள்ள , நான் மேலே குறிப்பிட்ட ஒரு பேராசிரியர் இதற்கு ஒரு உதாரணம்.

Saturday, September 23, 2006

ஓடைக்கு வெளியே

இத்தனை நாட்களாக என் கருத்துக்களை வெளியிட ஓடை வலைப்பதிவை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். ஓடை மின்னிதழுக்குத் தொடர்பில்லாத பொதுவான கருத்துக்கள் / எதிர்வினைகள் போன்றவற்றையும் ஓடை வலைப்பதிவில் எழுதி வந்ததால் ஓடை மின்னிதழ் தனக்குரிய தனித்தன்மையில் குறைவதாய் எனக்கொரு உறுத்தல் இருந்து வந்தது. இதனைக் களைந்து, எனக்கான தனி ஒரு களமாக இந்த புதிய வலைப்பதிவைத் துவங்கியுள்ளேன். இதன் மூலம் ஓடை பலருடைய (நான் உள்பட) கருத்துக்களைத் தாங்கி வரும் ஒரு தனி மின்னிதழாகத் தொடர்ந்து விளங்கும்.
ஓடை வலைப்பதிவில் இருந்து சில கருத்துக்களை வெளியே எடுத்து இங்கே இட்டுள்ளேன். என்னுடைய கருத்துக்கள் தொடர்ந்து இங்கும், ஓடையிலும் வெளியாகும்.

Friday, January 07, 2005

பத்திரிக்கைச் சுதந்திரம் !

நான் வெகு நாட்களாகவே கவனித்து வருகிறேன். சில செய்தித்தாள் / செய்தி நிறுவனங்கள் செய்தி படிப்பவர்களைத் திசை திருப்பும் வகையில் / செய்திக்கு ஒரு திடீர் முக்கியத்துவம் ஏற்படும் வகையில் செய்தியின் தலைப்புகளை வைக்கின்றன. 2 மாதங்களுக்கு முன்னால் ஒரு தமிழ் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. ' 'XY' கற்பழிப்பு - வழக்கில் திருப்பம் '. இங்கு 'XY' என்று நான் குறிப்பிட்டது ஒரு முன்னாள் நடிகையின் பெயர். ஆனால் செய்திக்கு உள்ளே இருப்பது 'XYZ' கற்பழிப்பு வழக்கு!இன்றும் rediff-ல் ஒரு செய்தி, கிரிக்கெட் வீரர் பாலாஜியைப் பற்றி.

வணக்கம்

ஆறேழு மாத இடைவெளிக்குப் பின்னர் திரும்ப வலையில் பதிய வந்தாயிற்று.கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் நான் சென்னை வந்து சேர்ந்தேன்.தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது ஏராளமான மக்கள் பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி என்று பெருந்துகளில் தொற்றிக் கொண்டிருந் தனர். பேருந்தில் நிற்கக் கூட இடமில்லை என்று சொல்லி ஏறக்குறைய 2 மணி நேரமாய்க் காத்துகிடந்து ஒரு வழியாய் ஊர் போய்ச்சேர்ந்தேன். வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும் வேலை செய்யவில்லை. மறுநாள் மாலை என் அக்கா 'நல்ல படியா வந்து சேர்ந்தியா, நீ வந்த வழியில ஒன்னும் பிரச்சினை இல்லையா?' என்று கேட்கின்ற வரையில் எனக்குத் தெரியாது, முந்தின நாள் தாம்பரத்தில் என் கண்முன்னால் பேருந்துகளுக்குள் தங்களைத் திணித்துக் கொண்டிருந்தவர்களில் நிறையப் பேர் திரும்பவரப் போவதில்லை என்று. எத்தனை ஆறுதல் சொல்லியும் யாருக்கும் நாம் இழந்த உயிர்களைத் திரும்பக் கொண்டு வந்து தர இயலாது என்றாலும் நம்மால் முடிந் த அளவுக்கு பண /பொருள் உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். குமரிக்கணடம் கடலுக்குள் தொலைந்தது, பூம்புகாரைக் கடல் கொண்டது என்பதெல்லாம் வெறும் புனைகதைகள் என்று ஒதுக்கியவர்கள் தங்கள் எண்ணத்தை மறுஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்தோனேசியா வேண்டாம், குறைந்தபட்சம் அந்தமானில் அழிவு ஏற்பட்டபோதாவது நம் வானியல் / கடலியல் அதிகாரிகள் தங்கள் தூக்கத்திலிருந்து விழித்திருந்தால் கூட நிறைய உயிர் சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். கூலிக்கு மாரடிக்கும் இந்த மாதிரியான முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் அமைச்சர் யார் என்று கூடத் தெரியாமல், முரளி மனோகர் ஜோஷிக்கு தகவல் அனுப்பினார்கள் என்று ஒரு செய்தித்தாளில் படித்தபோது எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. வானொலி நேர்முகம் ஒன்றில் நாகப்பட்டினம் விவசாயிகள் பலர் காலை 6-7 மணிக்கே குட்டைகளில் தேங்கியிருந்த தண்ணீரில் வித்தியாசமான அதிர்வுகளைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்தபோது இது எப்படி தொடர்புடையவர்களுக்குத் தெரியாமல் போனது என்றொரு ஆதங்கம் எழுந்தது. 'படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் ' என்ற பாரதியின் சாபம் பொய்தானா?

Monday, June 07, 2004

கொஞ்சம் இடைவெளி

எனது Reporting Officer பணியிட மாற்றம் பெற்றுச் செல்வதால் அவருடைய அனைத்து வேலைகளையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் கொஞ்ச நாளுக்கு இங்கு வர இயலாது,10 நாள் கழித்து சந்திப்போம்

Sunday, May 30, 2004

மீண்டும் ஓடைக்கு. .

கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது

Sunday, May 23, 2004

வலைப்பூவுக்கு வாருங்கள்

இந்த வாரம் முழுவதும் வலைப்பூ வில்(வலைப்பதிவுகளுக்கான ஒரு வலைப்பதிவு ) ஆசிரியராக இருக்க அழைத்திருக்கிறார்கள். உங்களை அங்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.